மேற்கு வங்கத்தில், ஆம்பன் புயலால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 72 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. புதனன்று காலை பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்நிலையில் ஆம்பன் புயல் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, வலுவிழந்து, மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் கரை கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில், ஆம்பன் புயலால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 72 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பலியானவர்களில் 15 பேர் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.